தமிழகம்

தாயுள்ளத்தோடு எங்களை முதல்வர் விஜய் அரவணைத்துள்ளார்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

“வதந்திகளை பரப்பி உண்மைக்கு தடைபோட முடியாது”

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ, ‘‘யாரும் தவெகவில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை’ என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், கடம்பூர் ராஜூ இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் தெய்வீக ஆசியுடன் கடந்த ஜூன் 6-ம் தேதி, சாதி, மத பணக்கலாச்சாரம் ஆகியற்றை முற்றிலும் ஒழித்து புதிய யுகம் படைத்திட்ட மக்களின் முதல்வர் விஜயின் தலைமையில் புதிய பாதை, புதிய பயணம் என்கின்ற வகையில் புதிய பயணத்தை தொடங்கினோம்.

தமிழக அரசியலில் இனி என்றும் வெற்றிக்கொடி நாட்டுகின்ற ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான். லஞ்சம் லாவண்யம், ஊழலற்ற மக்களாட்சி நடத்துகின்ற மாமனிதர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தாயுள்ளத்தோடு எங்களை அன்போடு அரவணைத்து மக்கள் பணியாற்றும் மாபெரும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் என்கின்ற பெருமிதத்தோடு எங்கள் பயணம் தொடர்கிறது.

இனி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் மட்டும்தான் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒரே இயக்கமாகும். மக்கள் பணி செய்கின்ற அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் நலன் கருதி அனைவரும் இணையப் போகின்ற ஒரே இயக்கமாகும்.

சில பொய்யுரைகளையும், கட்டுக்கதைகளை யும், வதந்திகளையும் பரப்பி உண்மைக்கு தடை போட முடியாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT