நாராயணசாமி
புதுச்சேரி: பிரதமர் மோடி வருகைக்காக போலீஸார் காட்டும் கெடுபிடியால் புதுச்சேரி மக்கள் அவதியடைந்திருப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார். அதற்காக அஜந்தா சிக்னல் தொடங்கி காமராஜர் சிலை வரை ரோடு ஷோ செல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் தடுப்புகள் வைத்து நேற்றே மூடப்பட்டு, போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், இப்பகுதியிலுள்ள காமராஜர் சாலை, 45 அடி சாலை தொடங்கி பல சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சிறிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இது குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில், ”பிரதமர் வருகைக்கு 2 நாள் முன்பாகவே மிகப் பெரிய கெடுபிடியை காவல்துறை செய்து வருகிறது. அஜந்தா சிக்னல் தொடங்கி காமராஜர் சிலை வரை உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மருத்துவமனைக்கும், கடைகளுக்கும் மக்கள் செல்ல முடியவில்லை. மக்கள் அலைக்கழிக்கப்பட்டு திருப்பி அனுப்படுகிறார்கள். வேலை செல்ல சிரமம். பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இன்று மாலை 4 மணிக்கு வருகிறார் என்பதற்காக நேற்று முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் செல்ல வேண்டிய மக்கள் திருப்பிவிடப்பட்டதால் சிரமம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு என்கின்ற பேரில் காவல் துறை செயல்பாடு மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையூறு செய்யப்போவதில்லை. காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் மக்களை பெரிய அளவில் பாதிக்க செய்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் தேர்தல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் தான் பொறுப்பு. பிரதமர் வருகையால் பொது மக்களை துன்புறுத்துவது ஏற்புடையதல்ல. இடையூறு இல்லாமல் பிரச்சாரம் நடத்தலாம்.
போலீஸ், மாவட்ட நிர்வாகம் கெடுபிடி கண்டிக்கத்தக்கது. தனி நபருக்காக மக்கள் அவதிப்பட அவசியமில்லை. பிரதமர் வரும் இரண்டு மணி நேரம் முன்பு மூடினால் ஏற்கலாம். ஆனால் 24 மணி நேரமாக மூடியிருப்பது தவறானது" என்று நாராயணசாமி கூறினார்.