புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 
தமிழகம்

புதுச்சேரி | ரங்கசாமியிடம் பாஜக சரண்டர் ஆகிவிட்டது: நாராயணசாமி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு அடிமையாக இருந்து ஆட்சி நடத்தி வந்த ரங்கசாமியின் செயல்பாட்டில் தற்போது மாற்றம் வந்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் பாஜக, ரங்கசாமியிடம் சரண்டர் ஆகி விட்டது” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்றனர். கூட்டணி கட்சிக்குள் ஒற்றுமை இல்லாததால் குழப்பம் இன்னும் நிலவுகிறது. இன்னும் இலாக்காக்கள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

எப்போது பேரவைத்தலைவர் தேர்தல் வரும் என காத்துள்ளனர். அது புரியாத புதிராக உள்ளது. தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாமில் அமைச்சர்களுக்கு இலாக்காகள் ஒதுக்கப்பட்டு வேகமாக செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் சுறுசுறுப்பாக ஆட்சி நடக்கிறது. ஆனால் புதுச்சேரியில் ஆட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை. கோப்புகள் அதிகாரிகளிடம் தூங்குகின்றன. அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் இல்லாததால் கோப்புகள் வராததால் அவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில்லை. முதல்வர் ரங்கசாமி வாட்ச் கடையிலும், ஆரோவில்லிலும், விழாக்களுக்கு செல்லும் வேலையில் இருக்கிறார். அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

சபாநாயகர் தேர்வுக்காக முதல்வர் ரங்கசாமி கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பினார். ஆளுநர் அதை திருப்பி அனுப்பிவிட்டார். அவர் பாஜக ஏஜென்டாக செயல்படுகிறார். பேரவைத்தலைவர் பதவியை பாஜக கேட்கிறது. முதல்வர் கொடுக்க முடியாது என சொல்கிறார். இதனால் பாஜகவுக்கு சாதகமாக, முதல்வருக்கு எதிராக கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். கோப்புக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரமுள்ளது. ஆளுநர் கைலாஷ்நாதன் பாஜக சங்கியாக செயல்படுகிறார்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அடிமை ஆட்சி நடத்தி, பாஜகவுக்கு அடிமையாக ரங்கசாமி இருந்தார். தற்போது மாற்றம் வந்துள்ளது. பாஜக பற்றி கவலைப்படாமல் பணியை முதல்வர் ரங்கசாமி செய்கிறார். புதுச்சேரியில் பாஜக, ரங்கசாமியிடம் சரண்டர் ஆகி விட்டது. தேர்தலுக்கு பிறகு 4 மாநில முதல்வர்களும் பிரதமர், உள்துறை அமைச்சர்களை சந்திக்கிறார்கள். நம் மாநில முதல்வர் ரங்கசாமி பிரதமரை சந்திக்கவில்லை. பிரதமர் மோடி புதுச்சேரி வந்து ரங்கசாமியை சந்திக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்.

தான் பாஜகவுக்கு அடிமையில்லை; தன்னை ஒன்றும் செய்யமுடியாது; நான் சுதந்திரமாக முடிவு எடுப்பேன் என்பது முதல்வர் செயல்பாட்டில் இருந்து தெரிகிறது. இரண்டு மாதங்களாகியும் அமைச்சர்களுக்கு இலாக்கா தராமல், பேரவைத்தலைவர் தேர்தல் நடத்தாமல் ரங்கசாமி செயல்படுகிறார். 11 எம்எல்ஏக்களை வைத்துள்ளதால் தன்னை நம்பிதான் பாஜக உள்ளதாக மோடிக்கு ரங்கசாமி சவால் விட்டுள்ளார்.

இதே நிலையை ரங்கசாமி கடைப்பிடித்தால் புதுச்சேரிக்கு நல்ல விடிவுகாலம் வரும். அதே நேரத்தில் மக்கள் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக ரேஷனில் அரிசி சரியாக போடுவதில்லை. மாதந்தோறும் அரிசி போடவேண்டும். அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. காவல்துறையில் ஊழல் கட்டுக்கடங்காமல் போகிறது.

தமிழக முதல்வரை பார்த்து புதுச்சேரி முதல்வர் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக லஞ்சத்தை ஒழிப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமி அவர் போல் புதுச்சேரியில் ஊழலை ஒழிக்க தயாரா? முதலில் முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் ஊழலை ஒழிக்கவேண்டும்.

அங்குள்ள ஆறு புரோக்கர்களை எடுத்துவிட்டாலே அவர் துறைகளில் ஊழல் இருக்காது. புதுச்சேரியில் ஊழலை ஒழிக்க ரங்கசாமி தயாரா இருக்கிறாரா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT