தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு
சென்னை: அதிமுக வீழ்ச்சிக்கும் பிளவுக்கும் துணை நிற்கக்கூடாது என்ற உணர்வோடும், மனக்குமுறலோடும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வெளியிட்டுள்ள அறிக்கை, “அதிமுகவில் 1977-ல் உறுப்பினராக சேர்ந்ததில் இருந்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் சமநிலையோடு பணியாற்றினேன். எனக்கு 2011-ல் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானேன்.
தொடர்ந்து 2016 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சர் அந்தஸ்தை பெற்றேன். 2021-ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றினேன். 2026-ல் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை தந்த தொகுதி மக்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் 15 ஆண்டு காலம் மனசாட்சியோடு பணியாற்றிய மன நிறைவை பெற்றுள்ளேன்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தனது எதிரிகளுக்கு தோல்விகளையே பரிசாக அளித்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் இமாலய வெற்றியை பெற்று தந்தவர். ஆனால், நாம் வளர்த்த கட்சி, நம்மை வளர்த்த தலைமை, எப்படி இருந்த கட்சி, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லும் அளவுக்கு அக்கட்சி தொடர் தோல்விகளை பெற்று வருவதோடு 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகமாக தோல்வி ஒன்றே சகஜமாகி வருகிறது.
மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தொடர் கதையாக கட்சியில் ஏற்பட்டு வரும் பிளவுகளும், சரிவுகளும் சரி செய்யப்படவில்லை. இனிமேலும் சரி செய்யப்படும் என்பது கானல் நீராகத்தான் முடியும் என்ற நிலையில் மிகுந்த மன உளைச்சலோடும், வருத்தத்தோடு கட்சியின் வீழ்ச்சிக்கும் பிளவுக்கும் துணை நிற்கக்கூடாது என்ற உணர்வோடும், மனக்குமுறலோடும் அக்கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி ஆட்சி அதிகாரத்தில் இருந்து தீய சக்தி திமுகவை வீழ்த்திய தூய சக்தியாக எம்ஜிஆர் வழியில் பணநாயகத்தை வீழ்த்தி காட்டிய ஜனநாயகன், எம்ஜிஆரின் மறு உருவாக விளங்கும் பொற்கால முதல்வர் விஜய் தலைமையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.