வி.கே.ராஜீவ்

 
தமிழகம்

74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி!

கி.தனபாலன்

ராமநாதபுரம்: திருவாடானை தொகுதியின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இங்கு வெற்றி பெற்ற யாரும் இதுவரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை. தற்போது முதல் முறையாக தவெக எம்எல்ஏ ராஜீவ் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், திருவாடானை தொகுதியில் தவெகவும் வெற்றி பெற்றன.

திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்தைவிட தவெக வேட்பாளர் வி.கே.ராஜீவ் 2,513 வாக்குகள் கூடுதலாக பெற்று எம்எல்ஏ ஆனார். மருத்துவரான ராஜீவ் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.

திருவாடானை தொகுதியில் 1952 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக 2 முறையும் (2016-ல் அதிமுக கூட்டணி முக்குலத்தோர் புலிப்படை) வெற்றி பெற்றுள்ளன.

2011-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் சுப.தங்கவேலனும், 2016-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாசும், 2021 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கருமாணிக்கமும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இத்தொகுதியில் இக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும், இதுவரை யாரும் அமைச்சராக பதவி வகிக்கவில்லை.

74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறை யாக இத்தொகுதியில் வெற்றி பெற்றவர் தற்போது அமைச்ச ராகியுள்ளார். இதையடுத்து மருத்துவர் ராஜீவுக்கு தவெகவினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT