கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மூடுபனி நிலவியது. இது நாளை முதல் 13-ம் தேதி வரை சென்னை, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவ வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவ வருகிறது. எதிரில் வருவது யார் என்று தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் பொழுது விடிந்த பிறகும், காலை நேரத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். ஜிஎஸ்டி நெடுஞ்சாலை, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்களை மெதுவாக இயக்கினர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தற்போது நிலவும் தெளிந்த வானம் காரணமாக, இரவு நேர குளிர் அதிகரித்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்ப இழப்பு அதிகமாகும். இதன் விளைவாக, மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து, வளிமண்டலத்தின் கீழ்மட்டங்களில் வெப்பநிலை புரட்டல் உருவாகிறது.
தற்போது நிலவும் கிழக்குத் திசை காற்று, வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை நிலப்பகுதிகளுக்குள் கொண்டு வந்து, கீழ்மட்டங்களில் ஈரப்பத அளவை அதிகரிக்கிறது. அதிக ஈரப்பதம், குறைந்த மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வெப்பநிலை புரட்டல் ஆகியவை இணைந்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிமூட்டம் உருவாவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கியது.
மேலும், லேசான காற்று காரணமாக கிடைமட்ட காற்று பரவல் குறைந்து, பனிமூட்டம் உருவாவதற்கு மேலும் ஆதரவாக இருக்கிறது. இதன் விளைவாக, அதிகாலை நேரங்களில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக காட்சித்திறன் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
12, 13 தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை வேளையில் வானம் தெளிவாகவும், அதன் பிறகு ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.