சென்னை: தமிழக மீனவர் நல வாரியம், இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கான நிவாரணம், மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம், உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உட்பட பல்வேறு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை எளிதாக அணுகலாம்.
தமிழக மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பல அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி, முழுமையாக இணையதளம் வாயிலாக அனைத்து நலத் திட்டங்களுக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மூலம் தனி நபர் அடையாளம் சரிபார்க்கப்பட்டு குறைந்த ஆவணங்களுடன் அனைத்து நலத் திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஏதேனும், அவசியம் இருப்பின் விண்ணப்பதாரர் துணை ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம்.
அவை, தமிழக மீனவர் நல வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு விண்ணப்பத்தின் வெளிப்படைத் தன்மை மேலும் வலுப்படுத்தப்படும்.
ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளுக்கும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தான வழிகாட்டுதல்களுடன் கூடிய விரிவான பயனர் கையேடு இணையதளத்தில் கிடைக்கச் செய்யப்படும்.
மேலும் மேம்படுத்தப்பட்ட இணையதள விண்ணப்பம் உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழக மீனவர் நல வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.