சென்னை அண்ணா சாலையில் உள்ள டயர் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
சென்னை: அண்ணா சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட டயர் கடைகள் எரிந்து சேதம் அடைந்தன. சென்னை அண்ணா சாலை பார்டர் தோட்டம், ஜி.பி. லேன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழைய மற்றும் புதிய வாகன டயர் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இங்குள்ள டயர் கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. டயர்கள் வேகமாக எரியத் தொடங்கியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறியடித்து வீதிக்கு ஓடி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், எழும்பூர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக்நகர், கோயம்பேடு, எஸ்பிளனேடு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தீ அடுத்தடுத்த கடைகளுக்கு வேகமாக பரவியதால் சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
எனினும், கடைகளில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான டயர்கள், பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அண்ணா சாலை போலீஸார் வழக்குப் பதிந்து மின்கசிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.