கவிஞர் ஈரோடு தமிழன்பன் | கோப்புப் படம்
சென்னை: மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற ந. செகதீசன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியதையடுத்து அன்னாரின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.11.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் தொண்டினை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.