தமிழகம்

டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது?

ஷாலினி

“நாங்கள் கோட்டை விட்ட இடம் இன்ஸ்டாகிராம் தான்” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இரண்டே ஆண்டுகளில் தமிழத்தின் அரசியல் திசையை தன்வசப்படுத்தியுள்ளது விஜய்யின் தவெக. ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம், ‘பஞ்ச்’ உடன் கூடிய பேச்சு நடை அறிக்கைகள் என தனது உத்திகளை அதிரடியாக மாற்றி, தவெகவை எதிர்கொள்ள புதிய டிஜிட்டல் பாய்ச்சலை தொடங்கியுள்ளது திமுக.

தேர்தல் களம் கொடுத்த பலத்த அடிக்குப் பிறகு, 70 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட அறிவாலயம் இப்போது ‘திராவிட மாடல் 2.0’ கனவை கலைத்துவிட்டு ‘டிஜிட்டல்’ அவதாரத்துக்கு தயாராகி வருகிறது. இது, இனி வரும் காலங்களில் ஆளும் தவெகவுக்கு ‘டஃப்’ கொடுக்க கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி, 34.92 விழுக்காடு வாக்குகளுடன் அரசியல் களத்தில் சாதனை படைத்துள்ளது. மறுபுறம், 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, வெறும் 59 இடங்களை மட்டுமே வென்று, 74 இடங்களை இழந்து பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.

ஆயுதம் ஆன டிஜிட்டல் களம்:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய நாள் முதலே டிஜிட்டல் களத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. மாநாட்டு அறிவிப்பு முதல் கொள்கைப் பாடல் வரை, ஒவ்வொரு நகர்வும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், எக்ஸ் ட்ரெண்டிங் என இளைஞர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது.

முதல் மாநாட்டிலேயே லட்சக்கணக்கானோர் லைவ் பார்த்ததும், #TVK என்கிற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட் ஆனதும் திமுகவுக்கு ‘அலர்ட்’ செய்தியைச் சொல்லியது. விஜய் குறைவான இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்திருந்தாலும், தனது பஞ்ச் வசனங்களாலும் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் முழங்கியது எடுபட்டது.

பாரம்பரியக் களப்பணி மற்றும் வலுவான கட்சிக் கட்டமைப்பு போன்ற திமுகவின் வழக்கமான சாதக அம்சங்கள் எதுவும் இந்தத் தேர்தலில் போதிய பலன் அளிக்கவில்லை. மாறாக, 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களைச் சென்றடைய மீம்ஸ்கள், வீடியோ எடிட்கள், ட்ரெண்டிங் ஆடியோக்கள் போன்ற நவீன டிஜிட்டல் ஆயுதங்களையே தவெக கையில் எடுத்தது. இந்த டிஜிட்டல் ஆட்டத்தில் தவெக பல அடிகள் முன்னேறி நின்றது.

திமுக தோல்வி குறித்து பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தேர்தலில் நடந்திருப்பது ஒரு புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது; பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். தமிழக நலன்களைப் பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. நானே இந்தத் தோல்விக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், “சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, சிறுபிள்ளைகள் மூலமாக அவர்களின் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ய வைத்து, ஆட்சிக்கு வந்துள்ளனர். இது நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது” என்றும் அவர் ஓபனாகப் பேசினார்.

உத்திகளை மாற்றும் திமுக:

தவெக தந்த அரசியல் அழுத்தத்தின் எதிரொலியாகவே திமுக தற்போது தனது டிஜிட்டல் உத்திகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறது. தேர்தல் தோல்விக்​கான காரணங்​களை தொகுதி வாரி​யாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்​பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்​களை அமைத்​திருக்​கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கூட​வே, தொண்​டர்​கள் தங்​களது கருத்​துகளை தங்​கள் குரலிலேயே பதிவு செய்ய ‘உடன்பிறப்​பின் குரல்’ என்ற பிரத்​யேக இணை​யதளத்​தை​யும் தொடங்கி இருக்​கிறார்.

மேலும், “திமுக இன்னும் எப்படியெல்லாம் உழைக்கவேண்டும். இணையதளம் மூலமாகத் தொண்டர்களும், பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறேன்.

அந்த மாற்றம்தான், நம் கட்சியை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கப் போகிறது” என திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் மேம்பாடு, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் பற்றி அந்த வெப்சைட்டில் கேட்கப்பட்டுள்ளன.

திமுகவின் இந்த டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி என்பது தவெக உருவாக்கிய அழுத்தத்தால் மட்டுமே நடக்கவில்லை. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்த திமுகவுக்கு, அந்த மாற்றத்துக்கான அவசரத்தையும் வேகத்தையும் தவெகவின் டிஜிட்டல் சுனாமி தற்பொழுது கொடுத்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து நம்மிடம் திமுக ஐடி விங் ஆலோசகர் கோவி.லெனின் கூறும்போது, “திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அண்ணாவின் காலத்து மேடைப் பேச்சுகள் தொடங்கி, கலைஞர் காலத்திலேயே சமூக வலைதளங்களை முதன்முதலில் பயன்படுத்தப் பழகிய இயக்கம் இது. 2026 தேர்தலிலும் காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப மேடைப் பேச்சு, ஃபேஸ்புக், யூடியூப் தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் வரை திமுகவின் சாதனைகளையும் கொள்கைகளையும் கொண்டு சேர்த்துள்ளோம்.

இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பொழுதுபோக்கு தளம். தற்போதைய இளம் வாக்காளர்கள் துரதிருஷ்டவசமாக சினிமா கவர்ச்சியால் மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிஜ அரசியல் நடைமுறைக்கும், சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இங்கிருந்துதான் ஒட்டுமொத்த சிக்கலும் ஆரம்பிக்கிறது.

டிஜிட்டல் தளங்கள் நமக்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக, பாஜக தனது ‘வாட்ஸ்அப் பல்கலைக்கழகம்’ மூலமாகப் பல்வேறு வதந்திகளைப் பரப்பியது. இல்லாத ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் ஏகப்பட்ட பொய்ப் பரப்புரைகளைத் திட்டமிட்டு அவிழ்த்துவிட்டது. அதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்களுடன், மிகக் கூர்மையான பதிலடிகளைக் கொடுத்து, அவர்களின் பொய் முகத்திரையைக் கிழித்தது திமுக. அன்று வாட்ஸ்அப் வதந்திகள், இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வந்து நிற்கிறது.

வாக்களிப்பதற்கு 18 வயது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக நிர்ணயித்துள்ள வேளையில், பள்ளி மாணவர்களையும், சிறுவர்களையும் இன்ஃப்ளூயன்ஸ் செய்து, ‘நண்பா, நண்பீஸ்’ என தந்திரமாக பேசி, தவெகவின் விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று விஜய் சொல்லியிருப்பதே சட்டப்படி மிகப் பெரிய குற்றமாகும். இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் ஆபத்தான போக்கின் தொடக்கம்.

'கொள்கை வாரியர்ஸ்’

வாக்காளர்களில் ஒருபகுதியினர் தங்களது தொகுதியில் நிற்பது யார்? அவர் தங்களுக்கு என்ன செய்வார் என்ற எந்த விவரமும் தெரியாமல், வெறும் சினிமா கவர்ச்சிக்காக, ‘விஜய்’ என்ற ஒரே ஒரு முகத்தை மட்டும் பார்த்து வாக்களித்துள்ளனர். சினிமாவை நிஜ அரசியலோடு ஒப்பிடுவது அழகல்ல.

திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மட்டுமன்றி, கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட ஏராளமான இன்ஃப்ளூயன்சர்கள், உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘கொள்கை வாரியர்ஸ்’ ஆக களப்பணியாற்றி வருகின்றனர்.

தற்போதைய அரசியல் சூழலை ஒரு ‘ரீல்ஸ் ஆட்சி’ என்று சொன்னால் அது மிகையாகாது. முதல்வர் விஜய் தொடங்கி, அவரைப் பின்தொடரும் ஆதரவாளர்கள் வரை, அனைவரும் இன்னும் ரீல்ஸ் மோடிலேயே இயங்கி வருவது வேடிக்கையாக உள்ளது.

திமுகவின் திட்டங்களை தாங்களே கொண்டுவந்தது போலவும், சாதனைகளைத் தங்களுக்குரியது போலவும் சித்தரித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய சூழலில், எது உண்மை, எது பொய் என மக்கள் குழப்பமடைகின்றனர். உண்மையை உரக்கச் சொல்லும் ‘கொள்கை வாரியர்ஸ்’ முன்னெப்போதையும் விட இப்போது அதிகக் கவனத்துடனும், ஆதாரங்களுடனும் மக்களிடம் உண்மையைச் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

திமுக ஐடி விங் ஆலோசகர் கோவி. லெனின் | மூத்த பத்திரிகையாளர்  பிரியன்

எம்ஜிஆர் மறைவுக்குப் பின், 43 வயதிலேயே ஜெயலலிதா முதல்வரானபோது, அக்காலக்கட்டத்தில் நிலவிய திரைப் புகழைப் பயன்படுத்தி திமுக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அன்று திமுகவின் கொள்கை சார்ந்த தீவிரப் பிரச்சாரம் அந்த சினிமா அலையைத் தவிடுபொடியாக்கியது. இன்று தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் எடுக்கும் தவெகவின் இந்தத் தற்காலிகச் சினிமா ஈர்ப்பு அலை விரைவில் மங்கிவிடும்.

திமுகவின் தோல்விக்கான உண்மையான காரணங்களை தொகுதி வாரியாக ஆழமாக ஆய்வு செய்து, கள நிலவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கண்டறிந்த பின், திமுக இன்னும் பன்மடங்கு வீரியத்துடன் மக்கள் மத்தியில் களம் காணத் தயாராகி வருகிறது.

அதன் அதிரடிப் பாய்ச்சலாக, ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் உடன்பிறப்புகள் தங்களின் கருத்துகளை நேரடியாகப் பகிர்ந்து வருகிறார்கள், நாங்களும் அதைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். ஃபேஸ்புக், யூடியூப் தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் நிற்கலாம்; வதந்திகளை எப்படி ஆக்கப்பூர்வமாக முறியடிக்க வேண்டும் என்பது 70 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட திமுகவிற்கு தெரியும்” என்றார் திமுக ஐடி விங் ஆலோசகர் கோவி.லெனின்.

இந்த டிஜிட்டல் யுத்தம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறும்போது, “தமிழக மக்கள் நீண்ட காலமாகவே இருபெரும் கழகங்களைத் தாண்டிய ஒரு வலுவான மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த அரசியல் வெற்றிடத்தை நோக்கியே விஜய்யின் அரசியல் பிரவேசம் அமைந்தது.

அவரது உச்சகட்ட சினிமா புகழ் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கலாம். ஆனால், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவே அவர் ஆட்சியைப் பிடித்துவிட்டார் என்று கூறுவது, வாக்களித்த ஒட்டுமொத்த மக்களின் அரசியல் முதிர்ச்சியை கொச்சைப்படுத்துவதாகும்.

‘டிஜிட்டல் அலை’ மட்டும்தான் காரணமா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூக ஊடகம் ஆதிக்கம் செலுத்துவது இயல்பு. இன்று இன்ஸ்டாகிராம் இருக்கலாம், நாளை வேறொன்று வரலாம். ஆனால், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்துள்ளதாகவே தெரிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் முரண்பாடுகளை ஆழமாக ஆராய வேண்டுமே தவிர, ‘டிஜிட்டல் அலை’ என்று ஒற்றை வரியில் கடந்துவிடக் கூடாது.

திமுகவின் தற்போதைய சரிவுக்கு சமூக ஊடகங்கள் காரணமல்ல. உட்கட்சி பூசல்கள், நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களின் மனக்கசப்புகள் மற்றும் புறக்கணிப்புகள், தொகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் மீது எழுந்த மக்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடனான முரண்பாடுகள் முதலானவை தேர்தல் அரசியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததில் மாற்றுக் கருத்தில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாக எழுந்த கடுமையான விமர்சனங்கள் திமுகவுக்குப் பெரும் பின்னடைவாக மாறி இருக்கலாம். திமுகவின் ஐடி விங் பலமாக இருந்தாலும், கள யதார்த்தத்தில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளைச் சீரமைப்பதும், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து களப்பணிகளை முடுக்கிவிடுவதும் மட்டுமே திமுகவுக்கு இனி வரும் காலங்களில் கைகொடுக்கும்.

சினிமா கவர்ச்சி, மாற்றம் ஆகியவை விஜய்க்கும் இந்த முதல் முறை கைகொடுத்துள்ளது. ஆனால், இது நிரந்தர வெற்றிக்கான உத்தரவாதம் அல்ல.

இனி வரப்போகும் தேர்தல்களில் விஜய்யின் நிர்வாகத் திறமை, மக்கள் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தும் விதம் மற்றும் மத்திய அரசின் சவால்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் அமையும்.

குறிப்பாக, விஜய் தலைமையிலான புதிய அரசு தேர்தல் களத்தில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை மற்றும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4,000 உதவித் தொகை ஆகியவற்றை செயல்படுத்திக் காட்டாவிட்டால், மக்கள் மீண்டும் ஏமாற்றமடைந்து மிகத் தீவிரமாக திமுக மற்றும் அதிமுகவை நோக்கி நகரத் தொடங்குவார்கள்.

மாற்றத்தின் அடிப்படையில் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால், அதை உடனடியாக நிரந்தர வெற்றி என்று முடிவு செய்ய முடியாது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி மற்ற அரசியல் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு, களப்பணியில் தீவிரமாக இறங்கினால் தமிழக அரசியல் வரலாறே மீண்டும் மாறக்கூடும். சமூக ஊடகத் தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்ததே தவிர, அது மட்டுமே முழுமுதற் காரணியல்ல” என்றார் தீர்க்கமாக.

SCROLL FOR NEXT