ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் தனது வீட்டில் கிடைத்த பழங்கால ஓலைச்சுவடிகளை சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்த விவசாயி ஜெகநாதன்.
ஈரோடு: ஈரோடு பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன். தனது வீட்டில் மூதாதையர் பாதுகாத்த அரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகளை சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைத்தார். அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெகநாதனின் வீட்டில் இருந்த ஓலைச்சுவடிகளை அவர் ஆய்வு செய்தபோது, அதில் முக்கியமான மருத்துவக் குறிப்புகள் இருப்பதை அறிந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழும நிர்வாகிகளுக்கு ஓலைச்சுவடி பற்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும அதிகாரி மாணிக்கவாசகம் தலைமையிலான மருத்துவர்கள் ஜெகநாதனின் வீட்டுக்குச் சென்று ஓலைச்சுவடிகளை பார்வையிட்டனர். பின்னர், அவற்றை ஜெகநாதன் ஆராய்ச்சி குழுமத்திடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து அதிகாரி மாணிக்கவாசகம் கூறுகையில், “தமிழ் மருத்துவத்தின் பாரம்பரியமான சித்த மருத்துவக் குறிப்புகள் அதிகளவில் ஓலைச்சுவடிகளில்தான் இடம்பெற்றுள்ளன. இவற்றை முறையாகப் பராமரிப்பதுடன், முக்கிய மருத்துவக் குறிப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற ஓலைச்சுவடிகள் இருந்தால், சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தை அணுகலாம்” என்றார்.