பாடகர் எஸ்.ஜானகி
சென்னை: புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் திரையிசை வரலாற்றில் ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்போடு அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி நேற்று (ஜூலை 11) காலமானார். அவரது மறைவை அடுத்து, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: ”புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.ஜானகி அம்மாவின் மறைவால் இந்தியா ஒரு இசை சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில் இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாகத் திகழும். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி: “புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. இணையற்ற நலினத்துடனும் பன்முகத் தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தியவர் அவர்.
அவரது இனிமையான பாடல்கள் வருங்காலத்திலும் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும். துயரமான இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசை சமூகத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: ”பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ”தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னைத் தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.
கடந்த 50 ஆண்டுகளாக இரவிலும், பகலிலும், பயண நேரங்களிலும், துன்பம் சூழ்ந்த வேளைகளிலும் ஜானகி அம்மையாரின் தேனிசைப் பாடல்கள் எனக்கு அருமருந்தாக உதவின. ஒன்பது வயதிலேயே மேடை ஏறிப் பாடிய ஜானகி, 18 வயதில் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய இமாலய சாதனையாளர் ஜானகி அம்மையார். நான்கு தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு அரசின் விருதுகள், ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசுகளின் விருதுகள் என 33 விருதுகள் இவரைத் தேடி வந்து இசைப் புலமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தது.
கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் காரு குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர இசையோடு போட்டி போட்டுக் கொண்டு சிங்கார வேலனே தேவா என்ற பாடல், இளைய ராஜாவின் இசையமைப்பில் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற பாடல், இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்ற அவரின் இன்னிசை, பொன்மேனி உருகுதே என்ற அவரின் காந்தக் குரல், மாதா உன் கோியிலில் மணி தீபம் ஏற்றினோம் என்ற அவரின் காந்தக் குரல், தேன் சிந்துதே வானம் என்ற அவரின் இனிய பாடல், டாடி டாடி என்று மழலைக் குரலில் அவர் பாடிய பாடல் என இப்படி நூற்றுக் கணக்கான நம் நெஞ்சம் கவர்ந்த பாடல்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும் ?
1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும்.
அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் எந்நாளும் நம்மோடு வாழ்வார்! அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரத்தில் மூழ்கி உள்ள குடும்ப உறவுகளுக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்: 1962ம் ஆண்டு 'கொஞ்சும் சலங்கை' திரைப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா' பாடலைக் கேட்டு இந்திய இசையுலகமே வியப்புடன் திரும்பிப் பார்த்தது. சுப்பையா நாயுடு இசையில் ஆபேரி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற இசைக் கலைஞரான காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தை இசைத்திருந்தார்.
அந்த நாதஸ்வர இசை சிறப்பானதா அல்லது அதற்கு இணையாக கு.மா.பால சுப்பிரமணியத்தின் தமிழ்ப் பாடல் வரிகளை இசைத்த பாடகியின் குரல் சிறப்பானதா என்று ஒரு பெரும் பட்டிமன்றமே அந்நாளில் நடந்தது. தமிழரின் பழம்பெரும் இசைக் கருவியான நாதஸ்வரத்துக்கு ஒப்பாக தன் குரல் வளத்தை வெளிக்காட்டி மக்களை வசீகரித்த அந்தக் குரல் எஸ்.ஜானகியின் குரல்.
இன்று தன் எண்பத்தியெட்டாம் வயதில் இசைப் பயணத்தை நிறைவு செய்து இயற்கையோடு கலந்திருக்கிறார் எஸ்.ஜானகி. நான்கு முறை சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளை வென்ற எஸ்.ஜானகி, பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், பத்து முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும் குவித்தவர்.
ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கூட தன்னை வெளிப்படுத்தியிருக்கும் எஸ்.ஜானகி, குழந்தைக் குரலிலும், ஆண் குரலிலும் பாடும் தனித் திறன் பெற்றவர். தென்னிந்திய இசையரசி என்று அழைக்கப்பட்ட அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலைத் துறையினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்: “பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மையார், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். இந்திய திரை உலகில் இவரது குரல் தனித்துவமானது. இளமை மாறாத இவரது இனிய குரலால் என்றுமே அழியாத பல பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். பல தேசிய விருதுகளை பெற்றவர். இவரது மறைவு இசை உலகிற்கு பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும், திரைத் துறையினருக்கும், இசை கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி: “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ்.ஜானகி அம்மையார் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர்.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ்.ஜானகி அம்மையார் தான். 4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர்.
இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான் பெரிய விருதாக மதித்தவர். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு. இசையரசி எஸ்.ஜானகி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.