சென்னை: குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை வாட்ஸ்-அப் செயலி மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்-அப் செயலி மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
பெற்றோர் 9445061913 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தேவையான தகவல்களை அனுப்பி பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பி.டி.எஃப். வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு சென்னை மாநகராட்சி வாயிலாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறக்கும் மருத்துவமனையில் பெற்றோர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தகவல்களைப் பெற்று மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கும்.
மாநகராட்சி அந்த தகவல்களை பெற்று பிறப்பு சான்றிதழ் தயாரித்து, அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். பின்னர் பெற்றோர் தங்களின் மொபைல் எண்ணை கொடுத்து பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலமாக எளிதில் பதிவிறக்கம் செய்யும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.