சென்னை: நெல் ஈரப்பதம் விவகாரத்தில் போராடும் எங்களுக்குத் துணை நிற்க யாரிடம் அனுமதி பெற பழனிசாமி காத்திருக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக் கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே, நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிக மழையால் நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, “சாகுபடிக் காலத்துக்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அரசியல் செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற பழனிசாமி காத்திருக்கிறார். கூட்டணி அமைத்தால், அதனால் தமிழகத்துக்கு நன்மைகளை பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சொல்வாரா. உழவர் நலனுக்கு தமிழகம் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன்.