அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கின்றனர். கடந்த 56 மாத திமுக ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதல்வர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை.
இந்நிலையில், திமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்’ மகளிர் மாநாடு நடத்துகிறார். 56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தரமணியில் வெளிமாநில இளம்பெண், கணவன், 2 வயது குழந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். நந்தனம் கலைக்கல்லூரி கேன்டீனில் பணியாற்றிய அரியலூர் பெண், திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீஸை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும்கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான், தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம். பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினை கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் திமுக அரசு ஈடுபட்டுள்ளது.
பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து, தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது. நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு உள்ளார் முதல்வர் ஸ்டாலின். விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள். திமுக கூட்டம் மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.