சிவகங்கை பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

 
தமிழகம்

வாஜ்பாயுடன் இருந்த கருணாநிதி, முரசொலி மாறன் சங்கிகளா? - சிவகங்கை கூட்டத்தில் ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததே, வாஜ்பாயுடன் இருந்த கருணாநிதி, முரசொலி மாறன் சங்கிகள் என்று முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா? என சிவகங்கை பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் திருப்பத்தூர், மானாமதுரையில் போட்டியிடும் பாஜகவை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:

          

பழனிசாமி கையில் ரத்த கறை படிந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்கள், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுகவில் சட்டத்தின் ஆட்சி நடந்தது; திமுக ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா, போதை ஆசாமிகள் சாலையில் நின்று கொண்டிருந்தோரை கொடூரமாக வெட்டியுள்ளனர். கோயில் காவலாளி அஜித்குமார் மீது பொய்யாக திருட்டு வழக்கு பதியப்பட்டு, விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ், போலீஸாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் ரத்த கறை படிந்த கை. ஸ்டாலின் பொம்மை முதல்வர் என்பதால் சரியாக ஆட்சி நடத்த முடியவில்லை.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால், பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததே. அப்படியென்றால், வாஜ்பாயுடன் இருந்த கருணாநிதி, முரசொலி மாறன் என்ன சங்கிகளா? அவர்களை சங்கிகள் என்று ஸ்டாலினே ஒப்புக்கொள்கிறாரா? காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பிரச்சினை எழுந்தபோது கனிமொழி டெல்லிக்கு சென்று பேசினார். அதை என்னவென்று சொல்வது? தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்துள்ளீர்கள்.

உதயநிதி சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து கார் பந்தயம் நடத்தினார். அவர்கள் செல்வச் செழிப்பாக இருப்பதால் பணத்தின் அருமை தெரியவில்லை. தந்தை, மகன் ஊதாரித்தனமாக மக்கள் வரிப் பணத்தை செலவழிக்கின்றனர்.

பழநி கோயில் பணத்தில் ரூ.162 கோடியில் 11 திட்டங்களுக்கு ஒப்பந்தம் விட்டனர். அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திட்டங்களுக்கு அரசு பணத்தை செலவழிக்காமல், எதற்கு பக்தர்கள் பணத்தை எடுக்கிறீர்கள். நான் தெய்வ பக்தி உடையவன்; தெய்வமே திமுக ஆட்சியை கேள்வி கேட்கும். யாருக்கும் தெரியாமல் கோயில் நகைகளை உருக்கிவிட்டனர். எவ்வளவு உருக்கினர்; எவ்வளவு திருடினர் என்று தெரியவில்லை.

கடந்த 2021-ல் அதிமுக தான் முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் நாங்கள் மகளிருக்கு ரூ.1,500 வழங்குவோம் என்றோம். ஆனால் நீங்கள் ரூ.1,000 வழங்குவதாக கூறினீர்கள். இந்த முறையும் நாங்கள் தான் முதலில் வாக்குறுதி அளித்தோம். நாங்கள் காப்பி அடிக்கவில்லை; எங்களது அறிவிப்பை தான் அவர்கள் காப்பி அடித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT