மரகதத்தால் ஆன சுவாமி சிலை. (அடுத்த படம்) மாயமான நிலையில்.
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் கனக மலை என்ற சிறிய மலையில் கோயில் அமைந்துள்ளது.
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ஆகியவற்றுக்கு நடுவில் இருப்பதால், இக்கோயிலை பக்தர்கள் ‘நடுபழநி’ என அழைக்கின்றனர். இக்கோயிலுக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்திவிட்டுச் சென்றனர். நேற்று காலை பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது கோயிலின் கருவறையில் இருந்த விலைமதிக்க முடியாத மரகதக் கல்லால் ஆன தண்டபாணி சிலையை காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்தினர் சித்தாமூர் காவல்போலீஸில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் தலைமையிலான போலீஸார் தனிப்படை அமைத்து மரகத சிலையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.