தமிழகம்

இலவச மின்சாரத்துக்கு ரூ.17,300 கோடி மானியம்: தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வீடுகள், விவசாயம், கைத்தறி மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இப்போதுள்ள நடைமுறைப்படி, வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், விவசாய இணைப்புகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு மின்சாரம் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுதவிர, விசைத்தறிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற சில குறிப்பிட்ட வகை மின் இணைப்புகளுக்கும் அரசு மானிய விலையிலேயே மின்சாரத்தை விநியோகம் செய்கிறது.

இவ்வாறு பல்வேறு பிரிவினருக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதால் மின் வாரியத்துக்கு ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட, ஆண்டு தோறும் அரசு மானியத் தொகையை வழங்க வேண்டும்.

இந்த மானியத் தொகையை எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே ஆய்வு செய்து நிர்ணயம் செய்கிறது. அதன்படி, 2026-27-ம் நிதியாண்டுக்காக, வீடு உள்ளிட்ட மொத்தம் 14 பிரிவுகளின் கீழ் ரூ.17,307 கோடி அரசு வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில், வீடுகளுக்கான மின்பயன்பாட்டுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.8,428 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முழுத் தொகையையும் 4 காலாண்டுகளாக பிரித்து, ஒவ்வொரு காலாண்டுக்கும் தனித்தனி தவணைகளாக மின் வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT