மதுரை: மதுரை மாவட்டம் பனையூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக குடும்பத்துக்கு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமைச்சர் நிர்மல்குமார், அரசு அதிகாரிகள் ஆகியோர் தலையீட்டால் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பனையூர் திருவள்ளுவர் காலனியில் நந்தினி என்பவர் தனது கணவர், 10-ம் வகுப்பு படிக்கும் மகன், 9-ம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோருடன் வசிக்கிறார். இவரின் வீட்டுக்கு மட்டும் கடந்த 17 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஏனென் றால், தாழ்வான மின்கம்பியை மாற்றிவிட்டு கூடுதல் மின்கம்பம் மற்றும் மின்பாதை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு அதிக செலவாகும் என்றும் கூறி இவரின் கோரிக்கை கிடப்பில் விடப்பட்டிருந்தது. இவர், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மனு அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாரிடமும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண்ராயிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
அதன்பேரில், நந்தினிக்கு மின் இணைப்பு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற் கான வைப்புத்தொகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டக் குழு சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, அவனியாபுரம் வட்டச் செயலாளர் எம்.சேதுராமு, தாலுகா குழு உறுப்பினர் எம்.போஸ், எம்.முரு கன் ஆகியோர் நந்தினி யிடம் நேரில் சென்று வழங்கினர்.
தொடர்ந்து, நேற்று நந்தினியின் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோருக்கு நந்தினி நன்றி தெரிவித்தார்.