சென்னை: ‘சிறப்பு மீட்டர் ரீடிங் மறு ஆய்வுப் பணியில் இதுவரை 15,323 மின் இணைப்புகளை ஆய்வு செய்ததில் 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடு கண்டறியப்பட்டது. மின்நுகர்வோர் யாரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின் கட்டணம் தொடர்பாக சில தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத் தொடர்ந்து, மின் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் சிறப்பு மின்னளவி (மீட்டர்) மறு ஆய்வுப் பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்தச் சிறப்பு ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, இதுவரை 15,323 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில் மட்டும், அதாவது 0.65 சதவீதத்தில் மட்டுமே மின்னளவி பதிவு மற்றும் மின்கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வேறுபாடு கண்டறியப்பட்ட மின் இணைப்புகளில், கள ஆய்வின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு இணங்க மின்கட்டணங்கள் உரிய முறையில் திருத்தி அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்தச் சிறப்பு மின் கட்டண கணக்கீட்டில் மறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மின்கட்டண கணக்கீட்டில் வெளிப்படைத் தன்மையை மேலும் உறுதி செய்வதோடு, மின் நுகர்வோரின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எனவே, மின்நுகர்வோர் யாரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகங்களை அணுகியோ அல்லது மின்னகம் (94987 94987) சேவை மையத்தை தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார் பதிவு செய்தோ உரிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.