சென்னை: தனியார் இடத்தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமையாளர்கள், நிறுவனங்களை ஒருங்கிணைக்க இணையதளத்தை மின்வாரியம் ஏற்படுத்தவுள்ளது. நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின.
இதற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வாகனங்களுக்கு எளிதான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3 கி.மீ. தொலைவிலும், நெடுஞ்சாலைகளில் தலா 25 கி.மீ. தொலைவிலும் ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட உள்ளது.
அரசுத் துறைகள் நேரடியாகவும், தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் சார்ஜிங் மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையம் அமைக்க இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.
எனவே தனியார் இடத்தில் சார்ஜிங் மையம் அமைக்க, இடத்தின் உரிமையாளர் மற்றும் சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனத்தை ஒருங்கிணைக்க, தனி இணையதளத்தை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த இணையதளம் வாயிலாக, சார்ஜிங் மையம் அமைக்க இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். அந்த தளத்தில் நிறுவனங்களின் விவரங்களும் இருக்கும். இருதரப்பும் தங்களுக்குள் நேரடியாக பேசி சார்ஜிங் மையம் அமைக்கலாம்.
இடத்தின் உரிமையாளருக்கு வாடகை வருவாய் கிடைக்கும். நிறுவனங்களுக்கு விரைவாக இடம் கிடைக்கும் என்பதால், அதற்கு ஏற்ப சார்ஜிங் மையங்களும் துரிதமாக அமைக்கப்படும். எனவே மின்சார வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்கும். இந்தப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.