செந்தில் வேலன்
சென்னை: தமிழக காவல்துறையின் உளவுத் துறை ஐஜியாக பணியாற்றி வந்த செந்தில்வேலனை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், புதிய உளவுத் துறை ஐஜியாக அவினாஷ் குமாரை நியமித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், உளவுத் துறை ஐஜியாக பணியாற்றி வந்த செந்தில் வேலனை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய உளவுத் துறை ஐஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலராக சாய்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார். மேலும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார்.
சென்னை காவல் ஆணையர் அருணை பணியிலிருந்து மாற்றியும் சமீபத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அருணுக்கு பதிலாக அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.