தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரி ராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

          

அந்த வழக்குகளில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு ஆகியன லஞ்சு ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

இதேபோல், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி அன்பழகன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி வீரமணி உள்ளிட்டோர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என்றும், மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்” என்று ஒவ்வொரு மனுக்களிலும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணை வரவுள்ளது.

SCROLL FOR NEXT