துரைமுருகன்
வேலூர்: நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள். பல வழக்குகளை பார்த்தவர்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் எப்போதோ நடந்த சர்க்காரியா கமிஷன், மிசா குறித்து முதல்வர் பேசுகிறார். அவர் குறிப்பிட்ட வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் இவ்வளவு நாள் நாங்கள் அரசியல் செய்கிறோம். அதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் கிடையாது. யாரோ 2 பேர் பேசுவதை வைத்துப் பேசுகிறார்.
முதல்வர் விஜய் காவல் நிலையத்துக்கு போகும் பழக்கம் இல்லை. ஒரு எஃப்.ஐ.ஆர் கூட அவர் மீது கிடையாது. ஒரு 15 நாள் கூட அவர் சிறை சென்றது கிடையாது. தியாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும். ஏதோ அடித்த காற்றில் கோபுரத்தில் ஒட்ட வைத்தது போல ஒட்டியதால் இப்படி பேசி வருகிறார். தியாகம் புரிந்தவர்களுக்கு தான் தியாகம் தெரியும். கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபப்பட காரணம் அவர்கள் தியாகம் புரிந்தவர்கள். இன்றைக்கும் தியாகம் புரிந்து கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் சட்டப்பேரவை கட்டுவதற்கு பதில் 3 சிலிண்டருக்கு பதிலாக 4 சிலிண்டர் கொடுக்க வேண்டியது தானே. இடைத்தேர்தலில் திமுக வெல்லும். சட்டப்பேரவையில் இல்லாதவர்களைப் பற்றி பேசக்கூடாது. இதன்பேரில் சட்டசபை விதியை முன்வைத்து முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கூறலாம். என் வீட்டில் ரெய்டு செய்வதாக கூறினர். செய்து கொள்ளட்டும். நாங்கள்அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள். இதேபோன்று பல வழக்குகளை பார்த்தவர்கள்.