தமிழகம்

டித்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்றில் சிக்கி விசைப்படகு சேதம்!

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: டித்வா புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்றினால் ராமேசுவரம் கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு தரை தட்டி சேதமடைந்தது.

தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் நிலவிய டித்வா புயல் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 530 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை வட தமிழகம் கடலோர பகுதிகளில் 9 முதல் 12 அடி வரை அலைகள் உயரமாகவும், சீற்றத்துடனும் காணப்படும். காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக மீன்வளத்துறை அதிகாரிகள்  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்திருந்ததால், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதிகளில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மேலும், பாம்பனில் நான்காம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

டித்வா புயல் காரணமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகு ஒன்று நங்கூரம் அறுந்து சேராம்கோட்டை கடற்பகுதியில் தரை தட்டி நின்றது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி தங்கச்சிமடத்தில் 16.60 மி.மீ, பாம்பனில் 13.70 மி.மீ., , மண்டபம் 11.70 மி.மீ, ராமேசுவரம் 09.00 மி.மீ, மழையும் பதிவானது.

SCROLL FOR NEXT