சென்னை: “மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருப்பூர் மாவட்டம் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் காவலரை மதுபோதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் விற்று கட்சியின் கஜானாவை நிரப்பத் திட்டமிடும் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தெருதோறும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு, குற்றங்களைப் பல்கிப் பெருகவிட்டு மக்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலை நிலவி வருகிறது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகத் தற்போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம்.
போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர்! தமிழகத்தை மீட்பர்” எனத் தெரிவித்துள்ளார்.