பொள்ளாச்சி: ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற முதல் மாநாட்டில் அதன் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், அந்த கட்சியில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. நடைபயணம், மாரத்தான், சைக்கிள் பயணம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்நிலையில், அந்த இயக்கத்தின் சார்பில் இன்று மாலை பொள்ளாச்சியில் ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநாடு நடைபெறுகிறது. இது அந்த இயக்கத்தின் முதல் மாநாடாக அமைந்துள்ளது. இதில் அதன் நிறுவனர் அண்ணாமலை பங்கேற்கிறார். சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அண்ணாமலை என்ன பேசவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், ‘வீ த லீடர்ஸ்’ தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம். மாறுவோம், மாற்றுவோம்” என்று இந்த மாநாடு குறித்து சமூக வலைதள பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.