சென்னை: புழல் பகுதியில் பூமிக்கு அடியில் சென்ற குடிநீர் குழாய் நள்ளிரவில் திடீரென உடைந்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சுமார் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புழல் மகளிர் சிறைச்சாலை அருகே சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான வளாகம் உள்ளது.
இங்கிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் புழல், அம்பத்தூர் சாலை, சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாதவரம் 200 அடி சாலை, மாதவரம், மணலி, மாத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து அதிகளவில் குடிநீர் வெளியேறியதால் சாலையில் சுமார் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது.
மேலும், அருகில் உள்ள சர்வீஸ் சாலைகளிலும் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் சேதமடைந்தன. உடைந்த குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் புழல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள 5 மற்றும் 6-வது தெருக்களிலும் புகுந்து தேங்கியது.
அதிகாலையில் வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், அங்கு ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் குழாய் திடீர் உடைப்பால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடைந்த குழாயில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில், சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி, குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாதவரம் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.