சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர்கள் 25 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஹோட்டல் அசோசியேஷன், தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம், தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்புகள், சிறு குறு தொழில் சங்கங்கள் மற்றும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘‘இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிறுவனங்கள் அளித்த தகவலின்படி, வீட்டு உபயோக பயன்பாட்டுக் கான சிலிண்டர்கள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. ஆனால், வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் விறகுஅடுப்புகளைப் பயன்படுத்தும் கட்டமைப்பு தற்போது இல்லை.
எனவே, மின்சார அடுப்புகளை பயன்படுத்த வசதியாக, மின் கட்டணத்தில் மானியம் அல்லது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஸ் சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது ஹோட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.