தமிழகம்

பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை: கட்சியினருக்கு தவெக எச்சரிக்கை

மோகன் கணபதி

சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தவெகவினர் யாரும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது என்றும், கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம்.

தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வர் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.

எனவே, தவெகவினர் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.

பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் தவெக தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT