படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: “நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் வெற்றியை காண்போம். ராகுல் காந்திதான் பிரதமர் என தவெகவினர் பேசினால் மறுநாளே பாஜக வந்து விடும். திமுகவை விமர்சனம் செய்யும் முதல்வர் விஜய், பாஜக என்கிற பெயரை கூட சொல்ல மறுக்கிறார். அப்படி பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசினார்.
சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் மீது தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன், எம்.பி சல்மா, எம்எல்ஏ கதிரவன், முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேசியது: “திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஊழல் என்றால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி, அதற்கு ஆதாரம் கேட்டால், முடிந்துபோன சர்க்கார்யா கமிஷன், அமலாக்கத் துறை வழக்கு, மிசா உள்ளிட்டவை குறித்து முதல்வர் பேசுகிறார். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சினிமாவில் வசனம் பேசுவது போல அவர் பேசுகிறார். இதேபோல திசை திருப்பும் பணியை தான் முதல்வர் செய்கிறார்.
சட்டப்பேரவையில் நாங்கள் நன்றாக பேசினால் கேமரா எங்கள் பக்கம் திரும்பாது. எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் கேமரா எங்கள் பக்கம் திரும்புகிறது. டி.வியில் நேரலையில் பார்ப்பது உண்மையல்ல. நாங்கள் சட்டப்பேரவையில் மோசமாக நடந்து கொள்கிறோம் என்று சித்தரிப்பதற்காகவே டிவியில் தொடர்ச்சியாக எங்களை காட்டுகிறார்கள். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிப்பதில்லை.
நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் வெற்றியை காண்போம். காங்கிரஸ் கட்சி நாதியில்லாமல் உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் என தவெகவினரை காங்கிரஸ் கட்சியினர் கூறச் சொல்லட்டும். அப்படி தவெகவினர் பேசினால் மறுநாளே பாஜக வந்து விடும். திமுகவை விமர்சனம் செய்யும் முதல்வர் விஜய், பாஜக என்கிற பெயரை கூட சொல்ல மறுக்கிறார்.
அவர் கெட்டிக்காரர். அப்படி பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால், அவர் பாஜக பெயரை கூட சொல்ல மறுக்கிறார்.
வருகின்ற தேர்தல்களில் திமுக 9 தொகுதிகளிலும் திருச்சியில் மீண்டும் வெற்றி பெறும். இது தானாக வந்த கூட்டம், ஆட்சியை அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கூட்டம்” என்று அவர் பேசினார்.
கூட்டணிக் கட்சி விவகாரம்: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘மிசாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசிடம் உள்ளது. அதை அமைச்சர் நிர்மல் குமார் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இந்தியாவிலேயே தங்கள் கூட்டணியை அரவணைத்து செல்லக்கூடிய தலைவராகதான் திமுக தலைவர் ஸ்டாலின் இருந்து வருகிறார்.
திமுகவில் இருந்து வெளியேறியவர்கள், அவர்களாக வெளியேறுவதற்கு திமுக காரணமாகாது. திமுக ஒருபோதும் தங்களது கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுத்ததில்லை. இனியும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’’ என்றார்.