கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: “தென் மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்க்கும்” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியது: “தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த முறையை போன்றே இந்த முறையும் திமுக எதிர்க்கும்.
தவெக அரசு பட்ஜெட்டை இன்னும் தாக்கல் செய்யவில்லை. அப்புறம் எப்படி விமர்சிக்க முடியும். தற்போது இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து கொண்டே தவெக அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும். தவெக அரசு குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
அனைத்து ஆட்சியிலும் காவல் மரணம் தொடர்கின்றன. இதற்கு ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது போலீஸாரின் கலாச்சார சீரழிவு. மேலும், அடக்குமுறைக்காக தான் ஆங்கிலேயர் காவல்துறையை ஏற்படுத்தினர். அதே மனநிலை தான் இன்னும் போலீஸாரிடம் உள்ளது. அதனால், டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் பயிற்சி அளித்து மனநிலையை மாற்ற வேண்டும். அப்போது தான் காவல் மரணங்கள் குறையும்.
தவெக நிர்வாகிகள் மீது லஞ்ச, முறைகேடு புகார் எழுந்தவுடனே நடவடிக்கை எடுக்கின்றனர். நடவடிக்கை எடுக்காமல் தவறுகளை சகித்துக் கொண்டு இருந்தால்தான் தவெக தலைமை மீது கேள்வி கேட்க முடியும். மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவது சமூக பிரச்சினை. இதில் அரசை குறை சொல்ல முடியாது. சமூகத்தை தான் மாற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.