திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: “யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவின் விவரம்: “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும், நம்முடைய கட்சியினருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.
அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறும் இருப்பதால், நான் அதைப் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான்... பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில், அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதி, மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அப்போதிருந்த ஒன்றிய அரசாங்கம் 30-01-1976 அன்று திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி, மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காகக் கோபாலபுரம் வீட்டிற்குக் காவல் துறையினர் வந்தார்கள். அன்றைக்கு நான் வீட்டில் இல்லை.
“பையன் பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே தொலைபேசியில் அழைக்கிறேன், வந்து கைது செய்து கொள்ளுங்கள்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த நாள் நான் வந்ததும் அவரே காவல் துறையினரை வரச்சொல்லி, கைது செய்யச் சொல்லிவிட்டார்.
சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களைக் கொண்டுபோய் அடைத்ததே தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும்.
இரவில் தூங்க விடாமல் காவல் துறையினர் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து வேறு எங்களைக் கொடூரமாக அடிப்பார்கள். அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே இறந்துபோனார்.
அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்கள் கூட இப்படி கைவைத்துத் தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன, நான் இல்லை என்று சொல்லவில்லை.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாகத் தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிறவர்கள் நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. போராளிகள் எல்லாம் இதைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை.
நீங்கள் கொள்கைத் தலைவராகச் சொல்லும் முன்னாள் முதல்வர் அண்ணா காலத்திலிருந்து திமுக-வின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயம்தான்.
யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டமன்றத்தில் ஒரு நூலகம் இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அங்கே அனைத்து ஆவணங்களும் இருக்கும். அங்கே சென்று என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். உண்மை என்னவென்று புரியும்.
இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் தவறான தகவலைப் பேசியிருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
இத்தனை வருடங்களாக அரசியலுக்காகக் கருணாநிதி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையே நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
அதுமட்டுமில்லாமல், அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய 95 சதவீத வழக்குகளில், இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் பழி வாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்கு இருக்கும் அனைவருக்குமே நன்றாகத் தெரியும்.
உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கூட அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசைக் கொள்கை எதிரியாகச் சித்தரிக்கும் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?
முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அது. அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது.
சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதை எல்லாம் விவாதம் செய்யுங்கள். அதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. அதை விட்டுவிட்டுத் தேவையில்லாத சர்ச்சைகளைச் சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.
நீங்கள் முதலமைச்சரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது நீங்கள் என்னிடம்: “தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை மிகவும் விமர்சித்துப் பேசிவிட்டேன், I am sorry Sir” என்று சொன்னீர்கள்.
அதற்கு நான்: “பரவாயில்லை Brother, அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், இனி யாரைப் பற்றிப் பேசும்போதும் அந்தக் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. திரும்பவும் சொல்கிறேன்... ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.
சட்டமன்றத்தையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேல் நின்று போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் ரியாலிட்டி என்ன? உண்மை ஊரைத் தாண்டுவதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா... அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
உங்கள் ஆட்சியில் தினம் தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டம்-ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 வருடம் பின்னாடி கொண்டுபோய் இருக்கிறீர்கள்.
விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை.
அனைத்துக் குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர் என்று சொன்னீர்கள், இப்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் மட்டும் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறீர்கள்.
மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாய் என்று சொன்னீர்கள், இன்னும் நாங்கள் கொடுத்த அதே 1,000 ரூபாயைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறீர்கள். அப்போது சொன்னதெல்லாம் ஒன்று, இப்போது செய்வதெல்லாம் ஒன்று.
மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், உண்மையிலேயே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது, இது சரியான மாற்றமா என்பதை கவனியுங்கள். எது நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு, எது திறமையில்லாத அரசு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக, திமுகவினருக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால்... மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை, நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதனால் இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது நமக்கென்னவென்று இருக்கக் கூடாது. அப்படி ஒரு எண்ணம் நம் சித்தாந்தத்திலேயே கிடையாது.
ஆட்சியை இழப்பதைத் திமுக என்றைக்குமே தோல்வியாக நினைத்தது இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போன்று, இதை மக்கள் பணியின் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தாத்தாவிற்காகச் சண்டை செய்தோம்... அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம்... இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம்… இதுதான் திமுக-வின் வரலாறு. அந்த வரலாறு எப்போதும் மாறாது, மாறவும் கூடாது” என்று அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.