சென்னை: ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (செப்டம்பர் 19) நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு முப்பெரும் விழாவை சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னோடிகளுக்கு விருது
இதில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான மாற்று தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நாளை (செப்டம்பர் 19 மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.