திமுக எம்.பி வில்சன்
சென்னை: ”முதல்வர் விஜய் தனது உதவியாளர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை பகிரங்கப்படுத்த வேண்டும்; அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்” என்று திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிரக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆந்திர மாநித்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய உதவியாளர்களும் நண்பர்களும் ஆவர். இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதலவரின் அறைக்கு அருகிலேயே அவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள் ?
முதல்வர் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார். இத்தகைய நபர்களை இதில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள் (Rules of Business) மற்றும் அவரது ரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றைப் பின்பற்றுவது குறித்து தீவிரக் கவலைகளை எழுப்புகிறது.
இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை முதல்வர் பகிரங்கப்படுத்த வேண்டும்; அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்” என்று திமுக எம்.பி. வில்சன் வினவியுள்ளார்.