தமிழகம்

தமிழிசை உடன் உற்சாக ‘போஸ்’ கொடுத்த கனிமொழி!

டி.ஜி.ரகுபதி

கோவை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உற்சாகமாக, ‘போஸ்’ கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்திலும், தேசிய அளவிலும், திமுக மற்றும் பாஜகவினர் அரசியல் ரீதியாக எதிர் துருவமாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் கடுமையான கருத்து மோதல்கள், போராட்டங்கள் நடத்துவது தொடர்கதையாய் நடந்து வருகிறது. இந்நிலையில், இரு கட்சியின் பெண் தலைவர்களும் ஒன்றாக நின்று ‘போஸ்’ கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி மற்றும் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் இதே விமானத்தில் பயணிக்க வந்துள்ளனர்.

விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்த கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து மூவரும் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த புகைப்படத்தை, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற திமுக மண்டல மாநாட்டு தலைப்பையும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், ‘அரசியல் மாண்பு, அரசியல் நாகரிகம் தொடரட்டும்’ என வாழ்த்துப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT