கனிமொழி எம்.பி

 
தமிழகம்

கல்பாக்கம், கோவை சம்பவம்: தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்

தமிழினி

சென்னை: “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதல்வர் விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத்தானே சொன்னார்” என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கல்பாக்கம் அருகே சமூக விரோதிகளால் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியும், கோவை - சுகுணாபுரத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட செய்தியும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்காமல், அனைத்துக்கும் திமுகவின் மீது பழிபோடுவதில் மட்டுமே குறியாகவுள்ளது தவெக அரசு.

இத்தனை ஆண்டுகளாக திரைப்படங்களில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் பெண்களுக்கு எதிராகக் கலாச்சார வகுப்பெடுத்தவர்களும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதல்வர் விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத் தானே சொன்னார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT