சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம்” - பேரவையில் உதயநிதி அறிவிப்பு

அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் முடிவு என விளக்கம்

அனலி

சென்னை: “அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக இந்த அரசு முடிவு எடுத்து அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜயே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் காரை பெற மாட்டோம்.

அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.” என்று கூறினார்.

அதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கார் வைத்திருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. எங்களின் நிலைப்பாடும் அது தான். அனைவரும் சமம் என்ற முறையில் தான் அனைவருக்கும் கார் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை” என்று பதிலளித்தார்.

மேலும் அவர், “உதயநிதிக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கும் போது ஏன் அரசு பங்களா கேட்கிறார்” என்றும் வினவினார்.

அரசு வாகனம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நிகழ்ந்தது.

SCROLL FOR NEXT