பாளையங்கோட்டை: முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், பாளையங்கோட்டை சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை 20-ம் தேதி கைது செய்தனர். அதையடுத்து நீதிமன்ற காவலில் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதற்கிடையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியிருந்தது. இன்று நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த அவருக்கு திமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.