சென்னை: தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு திமுகவினர்தான் காரணம் என்று தெரிவித்ததால், தவெக எம்எல்ஏ பல்லவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக அரசுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை; அவர்கள் முற்றிலும் குழம்பிப் போயிருக்கிறார்கள். மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க முதல்வரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
தமிழகத்தில் கோடைக்காலம் உக்கிரமாக இருப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோல்தான் இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் எங்களிடம் திறமையான நிர்வாகிகளும் அதிகாரிகளும் இருந்ததால், நிலைமையை சீராகக் கையாள முடிந்தது.
தற்போதைய சூழலில், தவெக அமைச்சர்கள் ஆளுக்கொன்றாக முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தவெக அரசுக்கு தெரியவில்லை.
அவர்களின் நிர்வாகத் தோல்வியை திசை திருப்புவதற்காக, திமுக மீது எவ்வித ஆதாரமும் இல்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு திமுகவினர்தான் காரணம் என்று திருவிக நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி மிகவும் பொறுப்பற்ற முறையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதற்காகத்தான் அவருக்கு தற்போது அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது பொய்யான குற்றச்சாட்டுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.