சென்னை: ‘இந்த ஆண்டு கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யாததாலும், அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததாலும் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை.
காவிரி நீர் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதல்வர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்றுவரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி: ஜூன் மாதம் 9.91 டிஎம்சி, ஜூலை மாதம் 32 டிஎம்சி காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அமைச்சர் கூறியிருப்பதை ஏற்கமுடியாது.
தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரவையில் பங்கு கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமை கொண்டாட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதித் தீர்ப்பை கர்நாடகாவுக்கு நினைவூட்டுகிறோம். எனவே, கர்நாடக அரசு உடனடியாகத் தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.