சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘ திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் இன்று (03-03-2026) கலந்து பேசியதில்,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும்; இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கையெழுத்திட்டுள்ளனர். இந்த உடன்பாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், “திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளரை நாளை பிரேமலதா அறிவிப்பார்” என்றார்.