செங்கல்பட்டு: முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரியை வழக்கை, அவரது மனைவி சங்கீதா திரும்பப் பெற்றார். இதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தெரிவித்தார்.
விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். வாபஸ் பெறுவதற்கு முதல்வர் விஜய் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
நீதிபதி சுஜாதா, ‘எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம்’ என அனுமதியளித்து, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
பின்னணி என்ன? -
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்க்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். முதல்வர் விஜய்யின் சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தர விட்டது.
தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆக.7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.