தமிழகம்

சிவகாசி பட்டாசு ஆலைகள் ஆய்வு: பேரவையில் அமைச்சர் கீர்த்தனா - தங்கம் தென்னரசு காரசார விவாதம்

தமிழினி

சென்னை: சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்புகள் குறித்து பேரவையில் அமைச்சர் கீர்த்தனா - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, சிவகாசியில் சில விபத்துகள் நடந்தன. அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.எதிர்க்கட்சிகள் யாரும் களத்துக்கு வரவில்லை. முதல்வர் விஜய் நிவாரணம் வழங்கி துணையாக இருந்தார்.

பின்னர் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கிறதா என 177 இடங்களில் ஆய்வு செய்தோம். அதை சரிசெய்த பிறகு, ஆய்வும் நிறுத்தப்பட்டது. பிரச்சினை எல்லாம் சரியாகி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகும், திமுக கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சிவகாசியில் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஆலைகளை பூட்டி வருவதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் சந்தோஷக் கடலில் மிதப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. விதிமீறிய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பிரச்சினை இல்லை.

விதியை பின்பற்றி நிறுவனங்களை ஆய்வு என்ற பெயரில் தொல்லை செய்வதால் தீபாவளி பட்டாசு உற்பத்தி பாதிக்கும். இது பட்டாசு தொழிலை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால்தான் இதை கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை. தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு தான் திமுக மற்றும் சில அமைப்புகள் போராட்டம் நடத்தியது” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT