தமிழகம்

‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் ஓர் அரசியல் இருக்கிறது: இயக்குநர் அமீர் கருத்து

என்.சன்னாசி

மதுரை: “ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது. மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஓர் அரசியல் இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மதுரை மண்டல ஜாக் என்ற அமைப்பு சார்பில் தமுக்கம் திடலில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குநர் அமீர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனநாயகன் திரைப்படம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதிகாரம் கொண்ட ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நேரத்தில் எந்தப் படமும் நிறுத்தப்பட்டதாக நினைவில்லை. முதல் முறையாக தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் நடந்துள்ளது.

‘ஜனநாயகன்’ படத்தில் உள்ள பிரச்சினையை தணிக்கை துறை சொல்லவில்லை. ‘விஸ்வரூபம்’ படத்தில் சிறுபான்மையினரை மனம் பாதிக்கும் காட்சி இருந்ததாக படம் பார்த்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனநாயகன் படத்தில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது. மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது.

          

மத்திய தணிக்கை போர்டு மாநிலத்துக்கு ஒரு விதியை விதிக்கிறதா என திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கேட்காத நிலையில், இதில் ஓர் அரசியல் இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். ‘சுரேந்தர் 2’ என்ற படத்தில் மோடி பதவியேற்பது போன்ற காட்சி இடம்பெற்றது போன்று 2014-க்கும் பிறகு பாஜக ஆதரவு திரைப்படங்கள் நிறைய வருகின்றன.

ஜனநாயகன் படத்தில் உள்ள காட்சிகள் எதாவது பாஜகவுக்கு எதிராக இருக்கலாம். அதை அவர்கள்தான் சொல்லவேண்டும். பிரச்சினையை சொல்ல மறுப்பதுதான் பிரச்சினை. அடிச்சவன் சொல்ல மாட்டான் என்றால், அடி வாங்குனவனாவது எதற்காக அடிக்கின்றனர் என கூறவேண்டும். யூகத்தில் பேச முடியாது.

தவெக நிலைப்பாடு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்கிறார், மற்றொருவர் 90 சீட், துணை முதல்வர் என்கிறார். அவர்களிடம்தான் முரண் உள்ளது; விஜய்யின் கூட்டணி பேச்சை நம்பிக்கை உள்ளதா என சந்தேகிக்க வேண்டியதில்லை. அரசியல் களத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வருவோரை காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம்” என்றார் அமீர்.

SCROLL FOR NEXT