சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கிமீ சுற்றளவுக்கு விதிக்கப்பட்ட கட்டுமானத் தடையால் 1.20 லட்சம் பட்டா உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், அத்தடையை நீக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிரெடாய் சென்னை தலைவர் மெஹுல் ஹெச்.தோஷி உள்ளிட்டோர் கூறியதாவது: பள்ளிக்கரணையில் மொத்தம் 1,248 ஹெக்டேர் நிலத்தை ராம்சார் சதுப்புநிலமாக அங்கீகரித்து கடந்த 2022-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
இந்த 1,248 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ராம்சார் சதுப்பு நிலப் பகுதியைச் சுற்றி தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதி 1 கிமீ சுற்றளவுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் வரை கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மடிப்பாக்கம் என 15 பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே ரூ.51,735 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடி மற்றும் மறைமுகமாக ரூ.19,790 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி 1 கிமீ சுற்றளவு பகுதிக்குள் இருக்கும் 1.20 லட்சம் பட்டா உரிமையாளர்கள், தங்களது நிலங்களில் வீடுகளை கட்ட முடியாமலும், நிலங்களின் மீது கடன் வாங்க முடியாமலும், தொழில்களுக்கு கூட உரிமங்களை புதுப்பிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 550 ஹெக்டேர் நிலத்தை நில அளவை எண்கள் மூலம் முறையாக அடையாளப்படுத்துவதுடன், சதுப்பு நிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதியை நிர்ணயித்து இறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடும் வரை 1 கிமீ சுற்றளவுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுமான தடையை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.