கரூர்: முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பரளியைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை என்கிற தங்கமணி (41). இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் திமுக வார்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார்.
கரூருக்கு கடந்த 10-ம் தேதி முதல்வர் வந்தபோது அவர் குறித்து விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் தவெக குளித்தலை நகரச் செயலாளர் விஜய் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் தங்கமணி மீது வழக்குப் பதிவு செய்து, இன்று (ஜூலை 13ம் தேதி) கைது செய்து குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை எம்எல்ஏ அ.சந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.
குளித்தலை போலீஸார் தங்கமணியை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தங்கமணிக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி விடுவித்தார்.