கடலூர்: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 12-ம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய்யை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய துறைமுகம் திமுக எம்எல்ஏவுமான சேகர்பாபு மீது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் சேகர்பாபு மீது 3 பிரிவுகளில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய்யை அவதூறாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மீது தவெக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யை அவதூறாகவும், ஆபாசமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தவெக நிர்வாகிகள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.