தமிழகம்

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறி விப்பைத் தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்கும் இந்த பலனை நீட்டிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுப் பணியாளர் களுக்கு கடந்த 01.01.2026 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும்.

பகுதி நேரப் பணியாளர்கள், தினக் கூலிப் பணியாளர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பணியிடங்களில் உள்ளவர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது. கோயில் நிதி நிலைமைக்கு ஏற்ப, உரிய விதி முறைகளைப் பின்பற்றி இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தனசேகர் கூறுகையில், "கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி" என்றார்.

SCROLL FOR NEXT