ராமேசுவரம்: டித்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக தனுஷ்கோடியில் இருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டு, புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டித்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. நேற்று தனுஷ்கோடி கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை பகுதிகளுக்குச் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனுஷ்கோடி மீனவக் கிராமங்களான கம்பிப்பாடு, பாலம் பகுதிகளிலிருந்து மீனவ மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் அழைத்து வந்து, ராமேசுவரம் தீவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். மேலும், தனுஷ்கோடி சாலையும் மூடப்பட்டது. இதனால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் பக்தர்களை போலீஸார் ராமேசுவரம் புதுரோடு அருகே திருப்பி அனுப்பி வைத்தனர்.
புயல் தாக்கத்தால் பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும், இடைவிடாத மழையும் பெய்து வருகிறது.